தமிழகத்தில் பிரபல பால் நிறுவனங்களில் ஒன்று ஆவின். இது பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்தின் சதவீதத்திற்கு ஏற்ப பால் விற்பனை செய்து வருகிறது. அதாவது சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால் மற்றும் பசும் பால் என்று ஒவ்வொரு வகையில் பால் வினியோகம் செய்கிறது.
அதில், பச்சைநிற பால் பாக்கெட் சென்னையில் அரை லிட்டர் இருபத்தி இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் நிர்வாகம் தற்போது பசும்பாலை 3½ சதவீதம் கொழுப்புசத்துடன் அரை லிட்டர் பால் பாக்கெட் 22 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.
கோவையில், கொழுப்பு அடர்த்தி குறைக்கப்பட்ட பச்சை பாக்கெட் பசும்பால் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் மற்ற ஊர்களிலும் இந்த விலை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விலை குறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் தெரிவித்ததாவது:- “ஆவின் பால் விலையில் தற்போது எந்த மாற்றமும் செய்யபடவில்லை. கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கு காரணம் அங்குள்ள மக்கள் பசும் பாலை விரும்புகின்றனர். அதனால், அந்த மாவட்டத்தில் மட்டும் அரை லிட்டர் பாக்கெட் பால் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மற்ற மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த விலை தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்ததாவது:- “தற்போது, கோவை மாவட்ட பால் ஒன்றியத்தில் கொழுப்பு சத்து குறைத்து, பழைய விற்பனை விலையிலேயே பசும்பால் என்று கொண்டு வந்துள்ளதை நிறுத்த வேண்டும்.
அதற்கு பதில், பழைய நடைமுறையில் நிலைப்படுத்தப்பட்ட பாலாகவே பொது மக்களுக்கு வினியோகம் செய்ய உத்தரவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் புதிய வகை பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.