'தமிழ்நாடு தன்னுரிமை கழகம்'.. புதிய கட்சியை தொடங்கினார் பழ.கருப்பையா

திராவிட சித்தாந்தம் இல்லாமல் புதிய கட்சியை தொடங்கியுள்ள பழ.கருப்பையா சென்னை, ஒய்எம்சிஏ திடலில் வரும் ஞாயிறு அன்று தொண்டர்கள் மாநாடு நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

பிரபல சினிமா நடிகர், தயாரிப்பாளர், இலக்கியவாதி மற்றும் மூத்த அரசியல் தலைவரான பழ.கருப்பையா திராவிட கட்சிகளுக்கு எதிரான கொள்கையுடன் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதற்கு, ”தமிழ்நாடு தன்னுரிமை கழகம்” என்று பெயர் வைத்துள்ளார். வரும் ஞாயிறு அன்று சென்னை, ஒய்எம்சிஏ திடலில் தொண்டர்களுக்காக மாநாடு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் பேசுகையில், இந்த மாநாடு தொண்டர்களுக்கான மாநாடு. பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மாநாட்டில் 4 ஆயிரம் தொண்டர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் மேலும் 10 ஆயிரம் தொண்டர்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்கள்.

கட்சி தொடங்கியபோதே இவ்வளவு பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. மக்களுக்கு அதை செய்வோம் இதை செய்வோம் என்று பொய் பிரச்சாரம் எதுவும் செய்யாமல் நாங்கள் முன்னோக்கி நகரவுள்ளோம். 50 ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால் தமிழக சூழல் மிக மோசமாக உள்ளது.

இதைவிட மோசமான சூழலை மாற்றியவர்தான் காந்தி. முதலில் மக்களை மாற்றியமைத்தார். பிறகு சுதந்திரத்தை வாங்கினார். எனவே மக்களின் சிந்தனை போக்கில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே எங்கள் கட்சியின் தலையாய கொள்கை. எங்கள் கட்சியின் கொடி முழு பச்சை நிறம்; அதற்கு நடுவே தமிழ்நாட்டின் வரைபடம்; அதற்குள் காந்தி நடக்கிறார்.. என்று பழ. கருப்பையா பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.