பனி பாதி… மேகம் மீதி…. கொடைக்கானலில் பகலிலும் கும்மிருட்டு: வாகன ஓட்டிகள் சிரமம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பனிமூட்டத்துடன், மேகமூட்டமும் அதிகளவு இருந்ததால் பகலே தெரியாத அளவிற்கு பட்டப்பகலில் இருள் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரத்திலேயே பனிமூட்டம் மலைப்பகுதியில் மட்டுமின்றி நகர் பகுதிக்குள்ளும் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்கிறது. நேற்று புயல் சின்னம் காரணமாக கொடைக்கானல் நகர், புறநகர் முழுவதும் பனிமூட்டத்துடன், மேகமூட்டமும் அதிகளவில் காணப்பட்டது.

 இதனால் பகலே தெரியாத அளவிற்கு கொடைக்கானலை பட்டப்பகலிலேயே இருள் சூழ்ந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பத்தடி தூரத்தில் எதுவும் தெரியாத ஒரு நிலை ஏற்பட்டதால் மதிய வேளையிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. மேலும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்தததால் நேற்று கொடைக்கானலில் பகலில் முழுவதும் அதிகளவில் குளிர் காணப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.