வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வாரி வாரி வழங்கிய ஏடிஎம் – உற்சாகத்தில் பொதுமக்கள்.!

சென்னை அருகே உள்ள அம்பத்தூரில் பழைய சி.டி.எச். சாலையில் இந்தியன் வங்கி ஒன்று உள்ளது. அதன் அருகிலேயே அந்த வங்கியின் ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்த ஏ.டி.எம். மையத்தில், நேற்று அதிகாலை பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வந்தனர். அப்போது, ஏ.டி.எம். எந்திரத்தில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணத்திற்கு பதிலாக எந்திரம் தாராளமாக பணத்தை அள்ளி வழங்கியது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு அவர்கள் குறிப்பிட்ட பணம் மட்டும் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. 

இதனால் பேரதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், போட்டி போட்டு ஏ.டி.எம் எந்திரத்தில் பணத்தை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, அம்பத்தூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர் ரூ.8 ஆயிரம் பணம் எடுத்த போது அவருக்கு கூடுதலாக ரூ.12 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் வந்தது. 

அதேபோல் திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ரூ.20 ஆயிரம் எடுப்பதற்கு முயன்றபோது அவர் ரூ.8 ஆயிரம் மட்டும் பணம் எடுக்கலாம் என்று ஏ.டி.எம். எந்திரத்தில் தகவல் காண்பித்தது. அதன்படி அவர் ரூ.8 ஆயிரம் எடுத்துள்ளார். ஆனால், ஏ.டி.எம் எந்திரம் அவருக்கும் ரூ.20 ஆயிரத்தை கொடுத்தது. 

இதனால், ஏடிஎம் வாசலில் ஏராளமானோர் குவிந்தனர். இதையடுத்து, ஏ.டி.எம். மையத்தில் கூடுதலாக பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களில் ஆறு பேர் மட்டும் வங்கி திறக்கும் வரை காத்திருந்து, பின்னர் வங்கி திறந்ததும் சம்பவம் தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் எழுதி கொடுத்து ஏடிஎம் எந்திரத்தில் கூடுதலாக வந்த பணத்தை திருப்பி கொடுத்தனர். 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி அவர்கள் விரைந்து வந்து ஏ.டி.எம். எந்திரத்தை சரிபார்த்தனர். அப்போது, 200 ரூபாய் நோட்டுகள் வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 நோட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. 

அதன் பின்னர், உடனடியாக ஏ.டி.எம்.எந்திரம் சரி செய்யப்பட்டது. மேலும், இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் கூடுதலாக பணம் எடுத்தவர்கள் யார் யார்? என்ற விவரத்தை வைத்து வங்கி அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். ஏடிஎம் எந்திரம் பணத்தை வாரி வழங்கிய சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.