புதுடெல்லி: தனது தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஏழைகளின் நலனே மையமாக இருந்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடந்த இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியது: “அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட முழுமையான பட்ஜெட் இது. இருந்தபோதிலும் யாரும் இதனை தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்று கூறிவிட முடியாது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருடைய நலன்கள், ஒட்டு மொத்த வளர்ச்சி ஆகியவை பட்ஜெட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனது தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஏழைகளின் நலனே மையமாக இருந்தன. பாஜக சித்தாந்தத்திற்கு எதிரானவர்களும் இந்த பட்ஜெட்டை வரவேற்றுள்ளனர் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியிருந்ததை நான் உங்களுக்கு இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நகரத்தில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதனால் பாஜக எம்பிக்கள் அதிகமான விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்.
ஜி20 கூட்டங்களில் பங்கேற்க வரும் பல்வேறு வெளிநாட்டு பிரதிநிதிகள், அந்தக் கூட்டங்களை இந்தியா ஏற்பாடு செய்திருக்கும் விதங்களை பெரிதும் பாராட்டுகின்றனர்” என்றார்.
கடந்த 2001-ம் ஆண்டு குஜராத் பூகம்பத்தை நினைவுகூர்ந்த பிரதமர் தனது பேச்சின்போது, துருக்கி, சிரியாவை தாக்கியுள்ள பேரழவு பூகம்பம் கூறித்தும் பிரதமர் பேசினார். பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட பிரதமர், “பாதிக்கப்பட்ட துருக்கி சிரியா மக்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளும் செய்யப்படும். உதவிப் பொருள்களுடன் இந்திய குழு துருக்கி விரைந்துள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.