கலிபோர்னியா: ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி வெகு விரைவில் வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் பயனர்கள் ஒரே நேரத்தில் 30 போட்டோக்களை மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் விரைவில் சில வசதிகள் அதில் மேம்படுத்தப்பட உள்ளது. இப்போதைக்கு இது பீட்டா டெஸ்ட் சோதனைக்கு கிடைப்பதாக தகவல்.
அதன்படி பயனர்கள் ஒரே நேரத்தில் 100 போட்டோக்களை அனுப்ப முடியுமாம். இது அதிகளவில் போட்டோ எடுக்கும் பயனர்களுக்கு பெரிதும் உதவும். ஆண்ட்ராய்டு 2.23.4.3 பீட்டா அப்டேட்டில் இது கிடைக்கிறதாம். அதே போல மற்றொரு போனுக்கு எளிதாக பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்டரியை அனுப்ப முடியும் என தெரிகிறது. இதனால் இனி இதற்காக கூகுள் டிரைவை சார்ந்து பயனர்கள் இருக்க வேண்டி இருக்காது.
மேலும், பயனர்கள் தங்கள் சாதனத்தில் எடுக்கின்ற அதே ஒரிஜினல் ரெஸல்யூஷனில் போட்டோக்கள் பகிர முடியும் எனத் தெரிகிறது. இப்போது ஒரிஜினல் ரெஸல்யூஷனில் போட்டோக்கள் அனுப்ப வேண்டுமென்றால் டாக்குமென்டாக அனுப்பலாம்.