ஓபிஎஸ்க்கும் நன்றி! இபிஎஸ்க்கும் நன்றி! எடப்பாடி தரப்பு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த பாஜக

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவ காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். திமுக கூட்டணி வேட்பாளர், நாம் தமிழர் கட்சி, சுயேச்சை உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்தார். நீண்ட குழப்பத்திற்கு பின்பு, இறுதியாக அதிமுக வேட்பாளராக தென்னரசு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.

அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு 
அதிமுகவில் இருஅணிகளாக இருக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்ததால், யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற இக்கட்டான நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது. ஒருவழியாக அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்தால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு அளிப்பதாக பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாழ்த்துகள்
அதுக்குறித்து பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, “தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு பாஜக தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தென்னரசு வெற்றிக்காக பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளரை நிறுத்தியுள்ள பழனிசாமிக்கு நன்றி. கூட்டணியின் நலன் கருதி வேட்பாளரை திரும்ப பெற்ற பன்னீர் செல்வத்துக்கு நன்றி. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களம்காணும் தென்னரசுக்கு வாழ்த்துகள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவரம்
மனுத்தாக்கல் தொடங்கிய நாள் : ஜனவரி 31
மனுத்தாக்கல் செய்யும் கடைசி நாள் : பிப்ரவரி 7
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாள் : பிப்ரவரி 8
வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாள் : பிப்ரவரி 10
வாக்குப்பதிவு நடைபெறும் நாள் : பிப்ரவரி 27 
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் : மார்ச் 2

இறுதி வேட்பாளர் பட்டியல் எப்பொழுது வெளியிடப்படும்?
இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால், நாளை (புதன்கிழமை) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு பிப்ரவரி 10 ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.