திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முன்விரோதத்தில் கட்டிடம் மேஸ்திரி மண்டையை லாரி ஓட்டுநர் உடைத்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சத்தியமூர்த்தி (46). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மதி (60) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களிடையே முன்விரோதம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மதி அருகே இருந்த கம்பால் சத்தியமூர்த்தியை தாக்கியுள்ளார். இதனால் சத்தியமூர்த்தியின் மண்டை உடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த சத்தியம் மூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதியை கைது செய்தனர்.