குக்கர் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம்: ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை என தினகரன் அறிவிப்பு

சென்னை: அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த காரணத்தால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார் என்று டிடிவி தினகரன் கடந்த ஜன.27-ம் தேதி அறிவித்தார். மேலும், துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேலு தலைமையில் 50-க்கு மேற்பட்டவர்களை கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களையும் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவபிரசாந்த், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமாரிடம் கடந்த 3-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று இன்று (பிப்.7) தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். மேலும், தலைமை கழக நிர்வாகிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.