புதுடெல்லி: டெல்லி மேயர் தேர்தல் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “டெல்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. மேயர் தேர்தல் இன்னும் நடத்தப்படவில்லை. இது ஜனநாயக படுகொலை” என்றார்.
டெல்லி மாநகராட்சி: டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. பாஜக 104 இடங்களிலும் காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் 15 ஆண்டுகள் டெல்லி மாநகராட்சியில் பெரும்பான்மை பெற்று வந்த பாஜக வலிமை இழந்தது.
இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும் துணை மேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். பாஜகவும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவித்தது.
அமளியால் தேர்தல் ஒத்திவைப்பு: இந்த நிலையில் டெல்லி மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 6, 24 ஆகிய தேதிகளில் நடந்தது. அப்போது ஆல்டர்மென்கள் எனப்படும் நியமன உறுப்பினர்கள் தொடர்பாக ஆம் ஆத்மி, பாஜகவினருக்கு இடையே ஏற்பட்ட அமளி மோதல்களால் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
3-வது முறையாக ஒத்திவைப்பு: இந்த நிலையில் திங்கள்கிழமை (பிப்.6) டெல்லி மாமன்ற கூட்டம் நேற்று காலை 11.30 மணிக்கு இடைக்கால அவைத் தலைவர் சத்ய சர்மா தலைமையில் தொடங்கியது. அப்போது மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஒரே நேரத்தில் நடைபெறும் எனவும் இதில் நியமன உறுப்பினர்களும் வாக்களிக்கலாம் எனவும் அவைத் தலைவர் சத்ய சாய் அறிவித்தார்.
இதற்கு ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நியமன உறுப்பினர்கள் வார்டு கமிட்டிகளில் மட்டுமே வாக்களிக்கலாம், மேயர், துணை மேயர் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என வாதிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளியால் மேயர் தேர்தல் நடத்தப்படாமல் 3-வது முறையாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
அவையிலிருந்து வெளியில் வந்த ஆம் ஆத்மி உறுப்பினர் ஆதிஷி, “அவையை ஒத்திவைக்கும் வகையில் அதன் நடவடிக்கைகளை பாஜக சீர்குலைக்க திட்டமிட்டுள்ளது. நாங்கள் உச்ச நீதிமன்றம் செல்கிறோம். நீதிமன்ற கண்காணிப்புடன் தேர்தலை நடத்தக் கோரவுள்ளோம்.” என்று தெரிவித்திருந்தார்.
1957-ம் ஆண்டு டெல்லி மாநகராட்சி சட்டப்படி, மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்திலேயே மேயரும் துணை மேயரும் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் தேர்தல் நடைபெற்று 2 மாதங்களுக்கு பிறகும் மேயரை டெல்லி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.