தேனி மாவட்டம், குமுளி சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்கு வேன், லாரிகளில் ரேஷன் அரிசி தொடர்ச்சியாக கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில்உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸார் மாவட்ட எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸார் குமுளி சாலையில் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமுளி சோதனைச்சாவடி வழியாக வந்த டாரஸ் டிப்பர் லாரியை சோதனை செய்ததில் தமிழகப் பகுதியிலிருந்து கேரளாவுக்கு 17 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார் கேரள மாநிலம், வாளையார் பகுதியைச் சேர்ந்த சான் பாச்சா, மதுரை தெற்கு வெளிவீதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரைக் கைதுசெய்து, மேலும் கடத்தலுக்கு உதவியாக இருந்து தலைமறைவாக இருக்கும் பாலசிங் என்பவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். லாரியில் கடத்தி வந்த 17 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, மாநில உணவுப் பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். “லாரி மதுரையிலிருந்து கேரளாவுக்குச் சென்றது. லாரியில் மொத்தம் 340 அரிசி மூட்டைகள் இருந்தன. இருவரிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு மூளையாக இருந்தவர் யார், எப்படி 17 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் சேகரிக்கப்பட்டன என்பதை அறியமுடியவில்லை. இவர்களை வழிநடத்திய பாலசிங் என்பவனைப் பிடித்தால்தான் அனைத்து விவரங்களும் தெரியவரும். சம்பந்தப்பட்ட அனைவரையும் விரைவில் கைதுசெய்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை தொடங்கியிருக்கிறோம்” என்றனர்.