மதுரை மாவட்டத்தில் மாமியார் வீட்டில் 5 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை திருடிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லட்சுமி. இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களது வீட்டு பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் யாரோ கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து லட்சுமி திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மூலம் இந்த கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் லட்சுமியின் மருமகனான கந்தவேல்(38), கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மாமியார் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்தது மருமகன் கந்தவேல் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கந்தவேலை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.