டெல்லி: ராய்ப்பூரில் நாளை நடைபெறவுள்ள கட்சியின் பொதுக்குழுவிற்கு செல்வதற்காக காங்கிரஸ் ஊடகத் தலைவர் பவன்கேரா விமானம் வந்தார். அங்கு டெல்லி போலீஸார் பவன்கேராவை தடுத்து நிறுத்தினர். இதனால் எம்.பி.க்கள் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் கேராவை விமானம் ஏற விடாமல் டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர், பின்னர் அஸ்ஸாம் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். நாளை முதல் கட்சிக் கூட்டம் நடைபெறும் ராய்ப்பூருக்கு செல்ல கேரா விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தந்தையை கேலி செய்து அவரை ‘நரேந்திர கெளதம் தாஸ் மோடி’ என்று அழைத்துள்ளார். பின்னர் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் கிண்டல் செய்தார்.
டிமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள ஹஃப்லாங் காவல் நிலையத்தில் பவன் கேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதனால் அசாம் போலீசார் அவரை கைது செய்யுமாறு டெல்லி காவல்துறையிடம் கோரிக்கை விடுத்ததாகவும், உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதிக்குப் பிறகு அவரை அசாம் அழைத்து செல்லவுள்ளதாகவும் அசாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளது.
இதனிடையே பவன்கேராவை விமானத்தில் ஏறவிடாமல் டெல்லி போலீசார் தடுத்ததை கண்டித்து எம்.பி.க்கள், காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி விமானநிலையத்தில் இண்டிகோ விமானத்தை மறித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.