மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் பல்லடம் அருகே உள்ள பனப்பாளையத்தில் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் காணாமல் போயுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் சிறுமியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே இருவரும் மதுரையில் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது, சிறுமியை கோபாலகிருஷ்ணன் திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வழக்கு பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு போலீசார் கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.