ரோம்: புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிவந்த படகு விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதில் 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகு இத்தாலி நோக்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
சிறிய படகில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த இந்த படகு, இத்தாலிய கடலோர நகரமான குரோடோனை நெருங்கிக்கொண்டிருந்தபோது பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த படகில் 100க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். படகு விபத்துக்குள்ளானதை அடுத்து, படகில் இருந்தவர்களில் சுமார் 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக ஆதன்குரோனோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 28 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடலில் நிலவும் மோசமான வானிலை தேடுதல் பணியை கடினமாக்கியுள்ளதாக இத்தாலிய தீயணைப்புப் படையினரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.