விழுப்புரம் மாவட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்த மாணவ ஜோடியில், மாணவரை கத்தியால் குத்திய கும்பல் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட போது அங்கு வந்த பொதுமக்களால் இருவரும் மீட்கப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்துள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், 17 வயது சிறுமியும் ஒரே பள்ளியில் படித்து வரும் நிலையில் நட்பாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் தங்களது ஊரிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செங்கமேடு ஏரிக்கரையில் இரவு 8.30 மணியளவில் ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், மாணவனை கத்தியால் குத்தி விட்டு மாணவி காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு, செல்போனை பறித்துக் கொண்டதோடு, கும்பலில் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
கத்திக்குத்தில் காயமடைந்த மாணவன் மற்றும் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சிலர் அங்கு வரவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
மயக்கமடைந்த நிலையிலிருந்த சிறுவனையும், சிறுமியையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மறுத்துள்ளதோடு, மாணவியிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், சம்பவம் நடந்து சுமார் 13 மணி நேரத்திற்குப் பிறகே இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்..
இதற்கிடையே, போக்சோ, வழிப்பறி, மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள விக்கிரவாண்டி போலீசார், 8 தனிப்படைகளை அமைத்து 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.