நாளை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது வாக்குப்பதிவு!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா அண்மையில் காலமானார். அவர் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். ஜனவரி 31-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து, 77 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, பட்டியல் வெளியானது.
கடந்த ஒருமாத காலமாக அரசியல் கட்சியினர் அனல் பறக்கப் பிரசாரம் மேற்கொண்டுவந்தனர். குறிப்பாக தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர் தென்னரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
தேர்தல் விதிகளின்படி நேற்று மாலையுடன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசியல் கட்சியினரின் பிரசாரம் ஓய்ந்தது.
இந்த நிலையில், நாளை காலை 7 மணிக்கு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதை முன்னிட்டு, வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீஸார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
நாளை வாக்குப்பதிவு முடிந்து, மார்ச் மாதம் 2-ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்படவிருக்கிறது.