காங்கேயம் அருகே வேன் மீது லாரி மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு; முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம்

திருப்பூர்: காங்கயம் அருகே வேன் மீது லாரி மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த நான்கு பேர் உயிரிந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த முப்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஓலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் கொடுமுடி கோயிலுக்கு திதி கொடுக்க ஞாயிற்றுக்கிழமை (பிப்.26) அதிகாலை சென்றுள்ளனர். திதி கொடுத்துவிட்டு மீண்டும் ஓலப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது முத்தூர் செல்லும் வழியில் உள்ள வாலிபனங்காடு என்ற இடத்தில் திதி கொடுக்க சென்றவர்கள் வந்த சரக்கு வேன் மீது எதிரே வந்த லாரி மோதி உள்ளது.

இதில் சரக்குவேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சரக்கு வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிட்டுசாமி , பூங்கொடி , தமிழரசி, சரோஜா ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

மேலும் சரக்கு வேனில் பயணித்த 30க்கும் மேற்பட்டார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த விபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.