கே.சி.பழனிசாமி புது டீலிங்: அதிமுக இனி இவரால் தலைநிமிரும்… ஏன் அப்படி சொன்னார்?

எம்.ஜி.ஆர் காலத்தில் அரசியல்வாதி கே.சி.பழனிசாமி. அதிமுக தொடங்கப்பட்ட போது தனது 13 வயதில் கட்சியில் சேர்ந்தவர். கோவை மாவட்ட அதிமுகவில் எம்.ஜி.ஆர் இளைஞரணிக்கு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். 1985ல் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

யார் இந்த கே.சி.பழனிசாமி?

24 வயதில் எம்.எல்.ஏவாகி இளம் அரசியல்வாதி என்ற பெருமையை பெற்றவர். அதன்பிறகு எம்.பி பதவி, ஜெயலலிதாவின் விசுவாசி, ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரட்டை தலைமையின் கீழ் முக்கிய நிர்வாகி என அரசியல் செய்து வந்தார். ஒருகட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதால் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

நீதிமன்ற வழக்குகள்

இதற்கிடையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு, உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு என குடைச்சல் கொடுத்து வந்தார். நேற்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆளுங்கட்சி மீது சில புகார்களை முன்வைத்துள்ளார். அதேசமயம் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பால் அதிமுக
எடப்பாடி பழனிசாமி
பக்கம் செல்லவில்லை. உண்மையான தொண்டர்கள் எம்.ஜி.ஆர் பக்கம் தான் நிற்பதாக குறிப்பிட்டார்.

அதிமுக தலை நிமிரும்

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில்,
”ஆளுநரால் இனி நிச்சயம் அதிமுக தலை நிமிர்ந்து நிற்கும்”
எனப் பதிவிட்டிருக்கிறார். இந்த விஷயம் பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுக தலை நிமிர்ந்து நிற்க ஆளுநர் எப்படி உதவி செய்வார்? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே அதிமுகவை ஒன்றிணைப்பதில் பாஜக தலைமை தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதை பார்க்கலாம். இதன் பின்னால் மக்களவை தேர்தல் கணக்குகள் இருக்கின்றன.

ஓபிஎஸ் சொன்ன தகவல்

முன்னதாக எடப்பாடி பழனிசாமி உடன் கைகோர்த்ததே பிரதமர் மோடி சொல்லித் தான் என ஓ.பன்னீர்செல்வமே கூறியிருக்கிறார். அதன்பிறகு எடப்பாடி உடன் மோதல் போக்கு ஏற்படும் போதெல்லாம் டெல்லி சென்று முறையிடுவதை ஓபிஎஸ் வழக்கமாக கொண்டிருந்தார். டெல்லியின் அதிகார மையம் தனக்கு ஆதரவாக இருப்பதை சுட்டிக் காட்டி எடப்பாடியிடம் சில விஷயங்களை சாதித்து கொள்ள முயன்றார்.

விட்டுக் கொடுக்காத எடப்பாடி

ஆனால் கடைசி வரை நம்பர் 2 அரசியல்வாதியாக தான் இருக்க முடிந்தது. ஏனெனில் அதிமுகவில் தனக்கான செல்வாக்கை படிப்படியாக உயர்த்தி கொண்டு டெல்லியின் ஆதரவுடன் ஓபிஎஸ்சை ஓரங்கட்டினார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் இருந்தே நீக்கி எடப்பாடி தரப்பு அதிரடி காட்டியது. அதன்பிறகு நீதிமன்ற வழக்குகள் தொடர் சலசலப்பை ஏற்படுத்தி வந்தன.

டெல்லி லாபி அரசியல்

ஆனால் நீதிமன்றமும், பாஜக தலைமையும் ஓபிஎஸ்சை கடைசியில் கைவிட்டு விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தான் டெல்லிக்கு சில கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கே.சி.பழனிசாமி சந்தித்து பேசியிருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் இவரது குரல் டெல்லியில் எடுபடாது என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

பாஜக போடும் திட்டம்

ஏனெனில் கே.சி.பழனிசாமி ஒரு குழப்பவாதி. யார் பக்கமும் நிற்க விரும்பாதவர். சீனியர் என்ற முறையில் தனக்கான மரியாதை இல்லை என்பதை அவ்வப்போது வெளிக்காட்டி கொண்டே இருப்பார். இருப்பினும் மாற்று கட்சிகளின் அதிருப்தி தலைவர்களை தன்வசம் ஈர்க்க அல்லது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாஜக என்றைக்குமே விரும்பும். அந்த வகையில் கே.சி.பழனிசாமியை அரவணைத்து செல்ல பாஜக தலைமை முன்வரலாம்.

இவரை வைத்தும் அதிமுகவின் அரசியல் கணக்குகளை மாற்ற டெல்லி திட்டமிடலாம். ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க அழுத்தம் வரலாம். அதிமுக மாஜிக்கள் மீதுள்ள ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க லாபி செய்யலாம். இதற்கு கே.சி.பழனிசாமிக்கு சில அசைன்மென்ட்கள் அளிக்கப்படுமா? இல்லை பாஜக வேறு வழிகளில் காய் நகர்த்துமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.