பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு, சண்டிகரிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இன்று பிற்பகலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கொலைக் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒருவருக்கொருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் இரண்டு கைதிகள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்திருக்கிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி குருமீத் சிங் அளித்தப் பேட்டியில், “சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். ஒரே கோஷ்டியைச் சேர்ந்தவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டது” என்றார். உயிரிழந்தவர்கள் மன்மோகன் சிங், மந்தீப் தூபன் என்று தெரியவந்திருக்கிறது. சித்து மூஸ்வாலா படுகொலைக்குத் தேவையான வாகனத்தை மந்தீப் தூபன்தான் கொலையாளிகளுக்குக் கொடுத்து உதவினான். இந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஸ்னோய் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
அவன் டெல்லியிலிருந்து பலத்த பாதுகாப்புடன் பஞ்சாப்புக்கு அழைத்துவரப்பட்டு, பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டு அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சித்து மூஸ்வாலா கடந்த ஆண்டு காங்கிரஸ் சார்பாக பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்தவுடன் பஞ்சாப்பில் முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பைப் திரும்பப் பெற்றுக்கொண்டது.
இதையடுத்து கடந்த மே 29-ம் தேதி சித்து மூஸ்வாலா மன்சா மாவட்டத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்றபோது எதிர் கோஷ்டியினரால் படுகொலைசெய்யப்பட்டார். பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டவுடன் இந்தப் படுகொலை நடந்தது. இந்தக் கொலை தொடர்பாக பஞ்சாப் போலீஸார் இந்தியா முழுவதும் ரெய்டு நடத்தி, குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்தனர்.