ஷிவ்புரி: மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட நர்சுக்கு 66 நாட்கள் கழித்து அம்மாநில சுகாதாரத்துறை இடமாற்ற உத்தரவு வழங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் பெது பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக தன்வி தப்டே (28) என்பவர் வசித்து வந்தார். இவர் தன்னை இடமாற்றம் செய்யுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதிகாரிகள் அவருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தன்வி தப்டே அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் செவிலியர்கள் பணியிட மாற்றம் குறித்த பட்டியலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டது.
இந்த பட்டியலில் கடந்த 66 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட தன்வி தப்டேயின் பெயரும் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்ட செவிலியருக்கு இடமாறுதல் உத்தரவை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டதை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், அவர் விரும்பிய நேரத்தில் இடமாற்ற உத்தரவு வழங்கியிருந்தார் தன்வி தப்டே தற்கொலை செய்து கொள்ள நேரிட்டிருக்காது என்றும் கூறிவருகின்றனர்.