ஐதராபாத் பல்கலைக்கழக தேர்தலில் படுதோல்வி அடைந்த ஏ.பி.வி.பி அமைப்பினர், வெற்றி பெற்ற மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் சங்க தேர்தலில் இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. ஏ.பி.வி.பி அமைப்பினர் ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஏ.பி.வி.பி அமைப்பினர் இந்துத்வா கட்சி கும்பலின் ஆதரவோடு வெளியாட்களை அழைத்து வந்தும், மது போதையில் மாணவர் சங்க நிர்வாகிகளை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சிலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஜனநாயக அமைப்பினர் ஏ.பி.வி.பி அமைப்பினருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் ஏ.பி.வி.பி அமைப்பினர் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஏ.பி.வி.பி அமைப்பினர் மற்றொரு தாக்குதல் சம்பவத்தை நடத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in