பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். திருநங்கை அதிர்ஷ்ட வசமாக உயிர்த் தப்பியுள்ளார்.
மர்வியா மாலிக் மீது துப்பாக்கிச் சூடு
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மர்வியா மாலிக் (26) இவருக்குத் தான் ஒரு செய்தி தொகுப்பாளர் ஆக வேண்டுமென்ற கனவிருந்திருக்கிறது. ஆனால் அவர் திருநங்கைகளுக்கு ஆதரவாகத் தொலைக்காட்சிகளில் பேசுவதாகக் கூறி அவரை சிலர் மிரட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அவரை சிலர் மர்மமான முறையில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ஆனால் திருநங்கை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பிய அவர் அளித்த பேட்டியில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் கூறியுள்ளார்.
ஊடகத்தில் பணிபுரிவதே கனவு
மர்வியா மாலிக் தான் 10-ஆம் வகுப்பு பயிலும் போது திருநங்கை ஆக வேண்டும் என முடிவெடுத்து வீட்டில் கூறியுள்ளார். அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க, அங்கிருந்து வெளியே சென்ற மர்வியா ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்துக் கொண்டே தன்னுடைய படிப்பைத் தொடர்ந்துள்ளார்.
மேக் அப் கலைஞராக பணிபுரிந்த இவருக்கு செய்தியாளராக ஆசை வந்ததால் வேலை செய்தே கல்லூரி முடித்துள்ளார். மேலும் அவர் பேஷன் ஷோவில் மொடலாக பங்கு பெற்று பலருக்கும் அறியப்பட்டவரானார்.
மர்வியாவை மிரட்டிய மர்ம நபர்கள்
இந்த நிலையில் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணிபுரியத் தொடங்கியுள்ளார்.இதன் மூலம் அவர் பாகிஸ்தானின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் ஆனார்.
@Ap
தொடர்ந்து திருநங்கைகளுக்காக குரல் கொடுப்பதால் அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. ஆனால் அவர் மீது குண்டுகள் ஏதும் பாயவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.