புதுடெல்லி: உலக அரங்கில் இந்தியா பிரகாசமான இடத்தில் இருக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜ பதிலளித்துள்ளது. சட்டீஸ்கரில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பேசும்போது, பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பேரழிவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர். இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று பேசுகையில், ‘‘பாஜ கட்சி செயற்கையான தேசியவாதத்தில் ஈடுபடுவதற்காக இளைஞர்களை நிர்பந்திக்கிறது.இந்திய ஒற்றுமை யாத்திரை பயணத்தின் போது காஷ்மீர் சென்ற போது அங்குள்ள இளைஞர்கள் தங்கள் விருப்பப்படியே தேசிய கொடியை ஏற்றினர்’’ என்றார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,‘‘முதல் முறையாக காஷ்மீரில் மோடி அரசு செய்த சாதனையை ராகுல் காந்தி வெளிப்படையாக ஒப்பு கொண்டுள்ளார். பாதயாத்திரையின் போது காஷ்மீரின் பல இடங்களில் இந்திய தேசிய கொடி பரவலாக பறந்துள்ளதை பார்த்ததாக ராகுல் காந்தியே தெரிவித்துள்ளார். பாஜ ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பேரழிவு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் பேசி உள்ளனர். ஆனால், இந்தியா தற்போது பிரகாசமான இடத்தில் இருப்பதாக உலக நாடுகள் தெரிவிக்கின்றன’’ என்றார்.