மனைவிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு போலீஸ்காரர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த மேல்விழி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (33). கள்ளக்குறிச்சி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவர், சின்னசேலம் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு சீலாபவுரிமேரி என்ற மனைவியும், 6 வயதில் மகளும், ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் சீலாபவுரிமேரி கோபித்துக்கொண்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்தோணிராஜ் வழக்கமாக காவல் நிலைய பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். ஆனால் மனைவி வீட்டில் இல்லாததால் விரக்தி அடைந்துள்ளார். அதனையடுத்து அந்தோணிராஜ் தனது மனைவி செல்போன் நம்பருக்கு நீ உனது வாழ்க்கையை பார்த்துக்கொள், நான் எனது வாழ்க்கையை முடித்து கொள்கிறேன் என மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சீலாபவுரிமேரி தனது வீட்டிற்கு அவசரமாக வந்து பார்த்தபோது கதவு உள்தாழ்ப்பாள் போட்ட நிலையில் இருந்துள்ளது. இதனால் சீலாபவுரிமேரி அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அந்தோணிராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக்கண்ட அவரது மனைவி கதறி அழுதார். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.