சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமியும் உயிரிழந்தார்.
சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த குற்றப்பிரிவு தலைமை காவலர் ராமலட்சுமி என்பவரின் மகள் சத்யா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொல்லப்பட்டார். பரங்கிமலை ரயில் நிலையத்தில் அவரது நண்பர் சதீஷ், திடீரென ரயில்முன் தள்ளிவிட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை பரங்கிமலை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், பின்னர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார், சதீஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
மகள் இறந்ததை தொடர்ந்து சத்யாவின் தந்தை மாணிக்கத்துக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அவர் விஷம் அருந்தி உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி சத்யாவின் தாய் ராமலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செயிண்ட் தாமஸ் மவுண்ட் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த ராமலட்சுமி, நீண்ட நாட்களாக தனது மகளின் இழப்பை தாங்க முடியாமல் இருந்துள்ளார். தொடர்ந்து, புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார்.
newstm.in