வடசென்னை பகுதியில் கேந்திரிய வித்தியாலயா பள்ளி தொடங்க அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹிந்தி தெரியாது போடா, ஹிந்தி வேணும்டா என்று தமிழகத்தில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், ஒரு பக்கம் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் ஹிந்தி கற்று கொடுக்கப்பட்டு தான் வருகிறது.
இது பணம் படைத்தவர்கள் ஹிந்தி கற்கலாம் என்ற நிலையை உருவாகியுள்ளது. மேலும், இதுபோன்ற தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரியாத அவலம் கண்கூடு.
இந்நிலையில், வடசென்னை பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இது குறித்து வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மேற்கொண்ட முயற்சியின்படி, திருவொற்றியூரில் ரெயில்வேக்கு சொந்தமான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு தற்காலிகமாக வகுப்புகள் தொடங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலாநிதி வீராசாமி தெரிவித்துள்ளார்.
ஹிந்தி தெரியாது போடா என்ற ஆளும் கட்சியினர், இன்று ஹிந்தி கற்று கொடுக்க முயற்சி செய்து, முடித்து கொடுத்து இருப்பதை சமூகவலைத்தளங்களின் விமர்சனமாக பதிவு செய்து வருகின்றனர்.