Villupuram Crime News: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ஆம் வகுப்பு மாணவியான இவர், செங்கமேடு ஏரிக்கரை பகுதியில் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தனது நண்பருடன் நேற்றிரவு தனிமையில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு திடீரென வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், கண்ணனை தலையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பலமாக தாக்கியுள்ளனர். தாக்குதலால் நிலைக்குழந்துபோன கண்ணன், சம்பவ இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
மாணவன் மயக்கமடைந்ததை அடுத்து, அவர்களிடம் இருந்த செல்போன், வெள்ளி கொலுசு ஆகியவற்றை அவர் பறித்துள்ளனர். அதில், ஒருவர் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் மாணவி கவிதாவும் மயக்கம்போட்டு விழுந்துள்ளார். பின்னர், அந்த இடத்தில் இருந்து மூன்று பேரும் தப்பித்துச்சென்றுள்ளனர்.
கவிதாவுக்கும், கண்ணனுக்கும் சிறிதுநேரத்தில் மயக்கம் தெளிந்துள்ளது. அவர்கள் அக்கம்பக்கத்தினரை அணுகி உதவி கேட்டதை அடுத்து, அவர்கள் சிறுவர்கள் இருவரையும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேற்றிரவு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் குற்றவாளியை பிடிப்பதற்காக விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான பத்து தனி படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, மாணவனை தாக்கி, மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய அடையாளம் தெரியாத நபர்களை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் இந்நிலையில், இன்று காலை பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகைப்படம் மூலம் குற்றவாளியை அடையாளம் கேட்கப்பட்டது. (போட்டோ ஐடென்டிஃபிகேஷன்). அதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு நபரின் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது.
மேலும், இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,”சிறுவன், சிறுமியிடம் இருந்து செல்போன், வெள்ளி செயினை அந்த மூன்று பேரும் பறித்துச்சென்றுள்ளனர். மூவரில் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றுள்ளார். இதன் மீதான புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின்படி கூட்டு பாலியல் வன்கொடுமை நடைபெறவில்லை” என தெரிவித்தார்.