ஸ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு அருகே அணைக்கரைப்பரட்டியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் வ. புதுப்பட்டி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் முத்துலட்சுமி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் பிப்.1-ம் தேதி பேரூராட்சித் தலைவர் சுப்புலட்சுமியின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது பேரூராட்சி தலைவரின் கணவர் சாந்தாராம் ஜாதியை சொல்லி முத்துலட்சுமியை அவதூறாக பேசி உள்ளார். பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி, முத்துலட்சுமியை அடிக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து முத்துலட்சுமி அளித்த புகாரில் வத்திராயிருப்பு போலீஸார் பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி மற்றும் அவரது கணவர் சாந்தாராம் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.