உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்ட அமெரிக்க கருவூல செயலர் ஜேனட் யெல்லன், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்தார்.
உக்ரைனுக்கு பொருளாதார உதவி
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் பொருளாதாரத்தில் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை ஆதரிக்க, இந்த ஆண்டு 40 பில்லியன் டொலரில் இருந்து 57 பில்லியன் டொலர் வெளிப்புற நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு 1.25 பில்லியன் டொலர்களை வழங்குவதாக, கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.
உறுதியளித்த கருவூல செயலர்
இந்த நிலையில் ஜோ பைடனின் கருவூலச் செயலர் ஜேனட் யெல்லென் உக்ரைனுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை திடீரென சந்தித்த அவர், ‘இதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். அமெரிக்கா உங்கள் பின்னால் இருக்கிறது. எவ்வளவு காலம் எடுத்தாலும் நாங்கள் உங்களுடன் நிற்போம்’ என கூறினார்.
அத்துடன் ரஷ்யாவுடனான போரில் அமெரிக்காவின் கூடுதல் நிதி உதவி உக்ரைனுக்கு இருக்கும் என அவர் உறுதியளித்தார்.
கீவ்வின் செயின்ட் மைக்கேல் சதுக்கத்தில் ஜேனட் யெல்லென், போரின்போது இறந்த உக்ரேனியர்களின் நினைவுச் சுவரில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
உக்ரைன் அரசாங்கத்திற்கு அமெரிக்க பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை நிரூபிப்பதற்காகவே அவரது வருகை இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவுடன் போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனுக்கு 13 பில்லியனுக்கும் அதிகமான பொருளாதார மற்றும் பட்ஜெட் ஆதரவு நிதியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.