திருவில்லிபுத்தூர்: ஆள் கடத்தல், போலியாக ஆவணங்கள் தயார் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சாத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மீது வழக்குப்பதிய திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் ராஜவர்மன். இவர் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆவார். ராஜவர்மன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட சிலர் கடந்த 2018ல் கூட்டாக பட்டாசு தொழிற்சாலை நடத்த முடிவு செய்து ஆவணங்களை பதிவு செய்தனர். ஆனால் ஒரு வாரத்திற்குள், ராஜவர்மன் உள்ளிட்ட 3 பேர் தங்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியாது என ரவிச்சந்திரனிடம் கூறினர். தங்களுக்கான முதலீட்டு தொகையை திருப்பி தரும்படி கேட்டனர். இதன்பேரில் ராஜவர்மன் உள்ளிட்ட 3 பேருக்கும் அவர்களது முதலீட்டு தொகையை ரவிச்சந்திரன் கொடுத்தார். தொடர்ந்து ரவிச்சந்திரன் மட்டும் பட்டாசு தொழிற்சாலையை நடத்தி வந்தார்.
தொழில் நல்லபடியாக நடந்து வந்த நிலையில், ராஜவர்மன் உள்ளிட்ட சிலர் இணைந்து போலியான ஆவணங்களை தயாரித்து, ரவிச்சந்திரனிடம் தாங்கள் தொடர்ந்து பங்குதாரராக உள்ளதாகவும், தங்களுக்குரிய முதலீட்டு தொகையை பிரித்து தரும்படியும் மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் ரவிச்சந்திரன் பணம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூரில் உள்ள லாட்ஜூக்கு அவரை கடத்தி சென்று அடைத்து தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு 2 காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தனக்கு பாதிப்பு ஏற்படுத்திய ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். திருவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வள்ளி மணாளன், ‘‘ரவிச்சந்திரன் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரம் உள்ளதால், குற்றச்செயலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிமுக ஆட்சியின் போது பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் 2 பேர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’’ என உத்தரவிட்டார்.