ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ‘இந்தியன்-2’ படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ‘இந்தியன்-2‘ படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு 2017-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது, அதன் பின்னர் பல இடையூறுகள் ஏற்பட்டு இப்படம் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டிருந்தத நிலையில் தற்போது படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘இந்தியன்-2’ படத்தின் தற்போதைய படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது.
‘இந்தியன்-2’ படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், ஜார்ஜ் மரியன், மனோபாலா மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார், நீண்ட நாட்களாக ரசிகர்கள் பலரும் இந்த படத்தை காண ஆர்வமாக காத்திருக்கின்றனர். முழு வீச்சில் நடைபெற்று வரும் படத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, படம் இந்த தீபாவளி பண்டிகையையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி, ‘இந்தியன்-2’ படத்தில் கமல்ஹாசன் ஏழு வில்லன்களை எதிர்கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, வெண்ணிலா கிஷோர், சிவாஜி குருவாயூர் போன்ற ஏழு நடிகர்கள் ‘இந்தியன்-2’ படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தனுஷ்கோடி பகுதியில் மிக பிரம்மாண்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை பார்த்திடாத வகையில் இந்தியன் தாத்தா சேனாதிபதி பயங்கர ஆக்ஷன் மோடில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.