ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க கட்சி துண்டு, கரை வேட்டியுடன் வந்த தேமுதிக வேட்பாளருக்கு எதிர்ப்பு!!

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அந்த தொகுதி மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கலைமகள் பள்ளியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வாக்களித்தார். இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பாக போட்டியிடும் ஆனந்த் வாக்களித்தார். கருங்கல்பாளையம் காவல் நிலையம் அருகே அக்ரஹாரம் மஜீத் வீதியில் உள்ள மதரசா பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் ஆனந்த்.

வாக்களிப்பதற்கு முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்களிக்க கட்சி துண்டு, கரை வேட்டியுடன் வந்த தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியை குறிக்கும் வகையில் கரை வேட்டி அணியக்கூடாது என தேர்தல் அதிகாரிகள் கூறியதால் ஆனந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து தேர்தல் விதிமுறை பற்றி தேர்தல் அலுவலர் விளக்கினார்தேர்தல் அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து உடையை மாற்றி வந்து தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களித்தார்.

பிறகு தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛ஈரோடு கிழக்கில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தேர்தலில் எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன். இளைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் வாக்கினை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். எந்த வேலை இருந்தாலும் கூட தேர்தலில் வாக்களிப்பது என்பது மிக முக்கியம்,’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.