தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய தலைவர் வாகை சந்திரசேகர் பேட்டி:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஆபாச நடனங்கள் நடத்தப்படுகின்றன. ஆபாச நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என, கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எங்கள் நல வாரியத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசரப்பட்டு கோரிக்கை வைக்காதீங்க… உங்க கட்சி பொதுக்கூட்டத்துக்கு இந்த மாதிரி ஆட்டமெல்லாம் வச்சு தான் கூட்டத்தை திரட்டுறாங்க… வேணும்னா மா.செ.,க்களை கேட்டு பாருங்க!
நடிகர் சிவகுமார் பேச்சு:
அனைவருக்கும் பொதுவான பூமி, காற்று, கடல் ஆகியவற்றை, இன்று கூறு போட்டு விட்டனர். யார் பெரியவர் என்ற போட்டி நிலவுகிறது. உலகில் வாழும் மனிதர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் திருக்குறள் சொல்கிறது. திருக்குறளை பொதுமக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்கவில்லை; மக்களுக்கு எளிமையாக சொல்லவில்லை.
உங்க ஆதங்கம் சரி தான்… அப்படியே, உங்க மகன்களான நடிகர்கள், சூர்யா, கார்த்தியை வச்சு, திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரசார இயக்கத்தை ஆரம்பிக்கலாமே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
தென்காசி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு, கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கேட்டது. ‘இதற்கு அனுமதி அளித்தால், அதையே ஒரு வாய்ப்பாக்கி, சமூக விரோதிகள் ஊடுருவி, சட்டம் – ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி, பொது அமைதி மற்றும் அரசு சொத்துக்கு பங்கம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்’ எனக் கூறி, காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. சமூக விரோதிகளின் நடமாட்டத்தை காவல் துறையால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பது, இந்த ஒப்புதல் வாக்குமூலத்தால் வெளிப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம், போராட்டம்னு இறங்கி, கனிமவளம் கடத்தலை தடுத்துட்டா, அவங்க, ‘கல்லா’ கட்ட முடியாதே… அதுக்கு தான் ஏதேதோ, உப்பு, சப்பில்லாத காரணத்தை சொல்லி அனுமதி மறுத்துட்டாங்க!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி:
‘ஆட்சிக்கு வந்தால் கனிம வள கொள்ளையைத் தடுப்போம்’ என, தி.மு.க., கூறியது. ஆனால், ஆட்சி அமைத்த பின், கனிமவளக் கொள்ளை அதிகரித்துள்ளது. மாநிலம் முழுதும், ‘கரூர்’ கும்பல், யூனிட்டுக்கு, 200 ரூபாய் வசூலித்து, கொள்ளைக்கு உடந்தையாக உள்ளது. தென்காசி,- செங்கோட்டை, கோவை — வாளையாறு, பொள்ளாச்சி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கனிமவளம் எடுத்து செல்லப்படுகிறது. கரூர் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தவங்க அடிக்கிற கொள்ளையை தடுப்போம்னு தானே சொன்னாங்க… தடுத்துட்டு, அதை அவங்களே செய்ய ஆரம்பிச்சிட்டாங்க, அவ்வளவு தான்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்