புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில், ‘வரும் மார்ச் 5ம் தேதி நடக்க உள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும்’ என மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ரவீந்திர பட் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட், ‘‘நீட் முதுகலை தேர்வுக்கு சுமார் 2 லட்சத்து 9ஆயிரத்து 29 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேர்வு நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் எப்படி நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க முடியும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது பல்வேறு புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும்’’ என தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரிய மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.