ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களிலும் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தற்போது செய்யவில்லை என்றும், பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை தடுக்கவில்லை என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காலை முதல் நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகியிருக்கும் நிலையில், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
ஒருசில வாக்குச்சாவடி மையங்களில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டதால், பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகவும் சோர்வடைந்து மயக்கம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்கள் அவதியடைந்தனர்.
பணப்பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை தடுக்காத தேர்தல் ஆணையம் தற்போது வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களிலும் தேவையான ஏற்பாடுகளை செய்யவில்லை.
தேர்தல் புகார்களையும் தடுக்காமல், தேர்தலுக்கான ஏற்பாடுகளையும் செய்யாமல் யாருக்காக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது” என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.