ஒலிம்பியா நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் ஒலிம்பியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாண்டாவா ஹோல்டிங்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் உள்ள அரசு நிலம், நீர்நிலை மற்றும் பூங்காவை ஒலிம்பியா நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அந்த பகுதியை பொதுமக்களால் பயன்படுத்த முடியவில்லை. எனவே, ஒலிம்பியா நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பட்டுக்கு அனுமதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒலிம்பியா நிறுவனம் பொது சாலையை ஆக்கிரமித்து சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளதாகவும், 192 சதுர மீட்டர் அளவுக்கு நீர்நிலையை ஆக்கிரமித்து கார் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஒலிம்பியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி அந்நிறுவனத்தின், கார் நிறுத்துமிடம், சுற்றுசுவர் மற்றும் நுழைவு வாயில் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும், ஒலிம்பியா நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலை மற்றும் சாலையை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.