அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வீசி வரும் பயங்கர பனிப்புயலால் பொது போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளது.
புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகில் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இதன் விளைவாக உலகின் பல நாடுகளில் வெயில், குளிர், மழை என அனைத்து காலநிலைகளும் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா காலநிலை மாற்றத்தால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பனிப்புயல் அமெரிக்க மாகாணங்களில் ஏற்பட்டது. இந்த புயலால் பலர் உயிரிழந்த நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் வீசி வரும் பயங்கர பனிப்புயல் அந்த மாகாணத்தை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரான Los Angeles மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன், மழையும் பெய்து வருகிறது. இதனால் வீதிகளெங்கும் பனி கட்டிகள் குவிந்துள்ளன. மேலும் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டு ரயில் சேவைகள் மற்றும் வாகன போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த புயலின் போது ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததில் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பனிப்புயல் காரணமாக கலிபோர்னியா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.