தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் சென்னை – மதுரை இடையே இயக்கப்படும் இருமார்க்க தேஜஸ் விரைவு ரயில், தாம்பரத்தில் நிற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், சென்னையிலிருந்து மதுரைக்கு இருமார்க்கத்திலும் இயக்கக் கூடிய தேஜஸ் விரைவு ரயில் நேற்று முதல் சோதனை அடிப்படையில் 6 மாத காலங்களுக்கு தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டிருந்தார்.
இதன் தொடக்க விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த தேஜஸ் விரைவு ரயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ. 840 கோடி செலவில் சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே போல, கிட்டத்தட்ட ரூ. 600 கோடி செலவில் பிரமாண்டமான முறையில் உலகத்தரத்தில் தாம்பரம் ரயில் நிலையம் மேம்படுத்தப்படவுள்ளது என்று கூறினார்.