ஒவ்வொரு மனிதனும் இன்று சமூக ஊடகங்கள் வழியே தனது கருத்துக்களையும், தங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களையும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கிவிடுகிறார்கள். சாதாரண மக்கள் தொடங்கி உயர் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வரை சமூக ஊடகங்கள் மூலம் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதே சமயம் அரசு ஊழியர்கள் யூ டியூப் சேனல் தொடங்கக்கூடாது எனவும், யூ டியூப்பில் வீடியோக்கள் வெளியிடக் கூடாது எனவும் கேரள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதகான காரணம் அரசு உத்தரவில் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யூ டியூப் சேனலில் சப்ஸ்கிரைப் செய்பவர்களின் எண்ணிக்கை மற்றும் வீடியோக்களை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்த நபருக்கு வருவாய் வரும். அரசு ஊழியர்கள் வேறு வழியில் வருவாய் ஈட்டுவது விதிமீறல் என்பதால் யூ டியூப் சேனல் தொடங்கவோ, வீடியோ வெளியிடவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
1960-ம் ஆண்டைய நடைமுறைச் சட்டத்தின்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தைத் தாண்டி வேறு வருவாய் ஈட்டக்கூடாது என விதி உள்ளது. இணையதளங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதும், கருத்துகள், கட்டுரைகள் பதிவிடுவதும் தனி மனித கருத்து சுதந்திரம் ஆகும். அதே சமயம் யூ டியூப் சேனல் என்பது கருத்துகளை பதிவிடும் தளம் என்றாலும் வருமானத்துக்கும் வழிவகுக்கும். எனவேதான் யூ டியூப் சேனல் தொடங்கவும், அதில் வீடியோ பதிவேற்றம் செய்யவும் அரசு ஊழியர்களுக்கு கேரள அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தீயணைப்புத்துறையில் பணிபுரியும் வீரர் ஒருவர் யூ டியூப் சேனல் தொடங்குவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதைத் தொடர்ந்தே அரசு ஊழியர்கள் யாரும் யூ டியூப் சேனல் தொடங்கவோ, அதில் வீடியோ வெளியிடவோகூடாது என கேரள அரசு உள்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.