சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் லீக் ஆனதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக சிபிஎஸ்இ விளக்கம்

டெல்லி: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் லீக் ஆனதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக  சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. பணம் பறிக்கும் நோக்கத்துடன் சில கும்பல் தவறான தகவலை பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள், மாணவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளுக்கு துணை போனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 5-ம் தேதி வரை தொடர்ச்சியாக இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் சிபிஎஸ்இ முக்கியமான சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை மையமாக வைத்து சில தவறான தகவல்கள் சமூக வளைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

கேள்வித்தாள்கள் முன்கூட்டியே லீக் ஆகிவிட்டதாக தகவல் தெரிவித்து பணம் பறிக்கும் நோக்கத்துடன் சில கும்பல்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த சிபிஎஸ்இ இந்த விவகாரத்தில் பெற்றோர்களும், மாணவர்களும் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், எந்த விதத்திலும் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு துணைப்போக கூடாது என்றும், அதுபோல துணைப்போனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு முறையும் பொதுத்தேர்வின் போது இது போன்ற சில சமூக விரோத கும்பல்கள் தவறான சில செயல்களில் ஈடுபடுவதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் தவறான தகவல்களை மாணவர்கள் பரப்பினால் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமான தேர்வுகள் வரக்கூடிய நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சிபிஎஸ்இ முக்கியமான அறிக்கையை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.