டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை அடுத்து கொந்தளித்துள்ள ஆம் ஆத்மி தொண்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயற்சித்ததால் பரபரப்பு நிலவியது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணீஷ் சிசோடியா நேற்று 8 மணிநேர விசாரணைக்கு பிறகு சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் டெல்லி முழுவதும் பதற்றமான சூழல் நீடிக்கிறது. மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை கண்டித்து புவனேஸ்வர், பெங்களூரு, சண்டிகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆம் ஆத்மி-யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டெல்லியில் கட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது. அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். சிபிஐ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா தலைமையகத்தில் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் முறைப்படி சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்கும் விதமாக அவர் பிற்பகல் 3 மணியளவில் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக சிபிஐ அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கடும் கண்டனம் தெரிவித்திருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் அழுத்தம் காரணமாக உரிய ஆதாரம் இல்லாதபோதும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.