தர்மபுரி மாவட்டத்தில் திருட வந்து போதையில் கோவிலுக்குள்ளேயே திருடர்கள் படுத்து தூங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் மான்காரன் கொட்டாய் பகுதியில் உள்ள சிவன் கோவின் பூட்டு உடைக்கப்பட்டு இன்று காலை கதவு திறந்து கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வழியாக சென்றவர்கள், கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கு 2 பேர் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் மதிகோன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவர்கள் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர்கள் இரண்டு பேரும் நேற்று முன்தினம் கோவிலுக்கு அருகே கட்டப்பட்டு வரும் பள்ளியில் பொருட்களை திருட வந்துள்ளனர்.
அப்பொழுது அவர்களைப் பார்த்து நாய்கள் குரைத்ததால் அங்கிருந்து ஓடி வந்த அவர்கள் நேற்று இரவு கோவிலில் திருடுவதற்காக பூட்டை உடைத்து உள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைத்ததால், பயந்து கோவிலுக்குள்ளேயே குடிபோதையில் படுத்து தூங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.