டெல்லி : நாகாலாந்து , மேகாலயா தேர்தலையொட்டி மக்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன் திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேகாலயாவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் இறந்ததால் மேகாலாயாவின் சோஹியோங் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகாலாந்தை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களில் 59 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. நாகாலாந்து அகுலுடோ தொகுதியில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்டதால் பாஜக வேட்பாளர் கஜேடோ கினிமி ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், மேகாலயா, நாகாலாந்து மக்கள் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மேலும், முதல் தலைமுறை வாக்காளர்கள், இளைஞர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனையை படைத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.