தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள ஷிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் 450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையம், கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையமாகும். முன்னதாக ஷிவமொக்கா விமான நிலையத்தின் மாதிரியை பிரதமர் மோடி பார்வையிட்டார். ஷிவமொக்கா விமான நிலையத்தின் பயணிகள் கட்டிடம் பாஜவின் கட்சி சின்னம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 300 பேர் விமான நிலையத்திற்குள் வந்து செல்லும் திறனுடன் இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இன்று முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 80-வது பிறந்தாளையொட்டி நிகழ்ச்சி மேடையில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று பல்வேறு திட்டப்பணிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பெலகாவி செல்கிறார். பெலகாவியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கும் மோடி, பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 13வது தவணையான சுமார் ரூ.16,000 கோடியை எட்டு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நேரடி பணம் பட்டுவாடா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்குகிறார்.இதையடுத்து ரூ.190 கோடி செலவில் மறுவடிவமைக்கப்பட்ட பெலகாவி ரயில் நிலைய கட்டிடத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.930 கோடியிலான லோண்டா-பெலகாவி இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஷிவமொக்கா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.