ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாதிரி வாக்குப்பதிவின்போது 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தது கண்டறியப்பட்டு, புதிய இயந்திரங்களைப் பொருத்தி வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.27) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு சம்பத்நகர் அம்மன் மெட்ரிக் பள்ளியில், ஈரோடு ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான எச்.கிருஷ்ணன் உன்னி தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக, அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்பாக, மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்து இருந்தது கண்டறியப்பட்டு, அந்த இயந்திரங்களுக்கு பதிலாக மாற்று இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தமுள்ள 238 வாக்குச்சாவடிகளில், 32 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுகிறது. இடைத்தேர்தலில் 77 வேட்ட்பாளர்கள் போட்டியிருவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க முடியும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.