வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சுகாதாரத்துறை கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், அறுவை சிகிச்சைகளை கூட நிறுத்தி வைக்கும் நிலைக்கு டாக்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங் கள், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மருந்து தயாரிப்புக்கு தேவை யான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இதில், 95 சதவீத மூலப்பொருட்கள் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டின் இறக்குமதி சந்தை முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக, மருந்து தயாரிப்புக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் கராச்சி துறைமுகத்தில் முடங்கி கிடக்கின்றன. அவற்றை விடுவிக்க தேவையான டாலர் கையிருப்பு அந்நாட்டு வங்கிகளிடம் இல்லை.
இதன் காரணமாக பாகிஸ்தானில் சுகாதாரத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். இதயம், புற்றுநோய், சிறுநீரக அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே கையிருப்பு இருப்பதாக, பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இதன் காரணமாக, அறுவை சிகிச்சைகளை டாக்டர்கள் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனைகளில் பணியாற்றுவோர் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. ‘அரசு உடனடியாக தலையிட்டு நிலைமையை சீரடைய செய்யவில்லை எனில், மிகப் பெரிய பேரழிவுகளை சந்திக்க நேரும்’ என, பாக்., மருத்துவ சங்கம் எச்சரித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement