பிறந்தநாள் கொண்டாட்டம்: கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர்கள்; நீரில் மூழ்கி பலியான சோகம்!

சிவகாசி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கண்மாயில் குளிக்கச்சென்றவர்கள் நீரில் மூழ்கி பலியானார்கள். இது குறித்து போலீஸாரிடம் விசாரிக்கையில், “விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்தவர்கள் கமல், யோசேப். இவர்கள் இருவரும் நண்பர்கள். இதில் யோசேப், 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வேலைக்கு சென்று வந்திருக்கிறார். கமல் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) அந்தப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், யோசேப்-க்கு நேற்று பிறந்தநாள் எனத்தெரிகிறது. இதைக் கொண்டாட கமல், யோசேபும் ஆகிய இருவரும் முடிவு செய்திருக்கின்றனர்.

யோசேப்

இதைத் தொடர்ந்து, யோசேபின் பிறந்தநாளுக்காக ‘கேக்’ வாங்கிய அவர்கள், மற்றொரு நண்பர் ஸ்ரீகுமரன் உள்பட மேலும் 2 பேர் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர். கேக் வெட்டி முடித்த கையோடு திருத்தங்கல் பெரியகுளம் கண்மாய்க்கு குளிப்பதற்காக நண்பர்கள் 4 பேரும் சென்றிருக்கின்றனர். அப்போது நீண்டநேரம் குளித்துக் கொண்டிருந்ததால், கமல், யோசேபு ஆகிய இருவரும் கண்மாயின் ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவர்கள், நீரில் மூழ்கியவாறு வெளிவரமுடியாமல் தத்தளித்திருக்கின்றனர். கண்மாய்க்கு குளிக்கச்சென்ற நான்கு பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால், நண்பர்கள் தண்ணீருக்குள் மூழ்கி தத்தளிப்பதை பார்த்த மற்ற இருவரும், அவர்களை காப்பாற்றத் தெரியாமல் தவித்திருக்கின்றனர். இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

பலியானவர்கள்

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேர தேடுதலுக்கு பிறகு கண்மாயில் மூழ்கிய கமல், யோசேப் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களின் உடல் கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார்‌ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.