பிளஸ்2 செய்முறை தேர்வுகள் 1ம் தேதி தொடக்கம்: பொதுத்தேர்வுக்கு 200 கூடுதல் மையங்கள்

நெல்லை: தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நாளை மறுதினம் மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. பொதுத்தேர்வுக்கு கூடுதல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில்  பிளஸ்2 மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதற்கான உச்சக்கட்ட பணிகளை தேர்வுத்துறை மேற்கொண்டுள்ளது. தேர்வை கண்காணிக்க மாவட்ட அளவில் கல்வித்துறையில் இருந்து சிறப்பு கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ்2, பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு முன்னதாக செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த செய்முறை தேர்வுகள் வருகிற 1ம் தேதி தொடங்கி 9ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தலைமையாசிரியர்களுக்கு செய்முறை தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி விளக்கம் அளித்துள்ளனர். இதற்கான வழிகாட்டு கையேடுகளும் தலைமையாசிரியர்கள் மற்றும் செய்முறை தேர்வு நடத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வு நடத்துவதற்காக தேர்வுக்கூடங்களை தயார் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. இந்த செய்முறை தேர்வுகளின் தொடர்ச்சியாக பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகளையும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். தேர்வு மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உள்ள குடிநீர், கழிப்பறை, இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர். கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு 3 ஆயிரத்து 262 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதுபோல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் 4 ஆயிரத்து 92 மையங்கள் அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது நடப்பு கல்வியாண்டில் கூடுதலாக 200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கடந்த கல்வியாண்டில் தேர்வு மையங்களாக இருந்த சில மையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உரிய விடைத்தாள் மற்றும் முகப்புத்தாள் இணைக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன. இந்தப்பணிகளையும் இந்த வாரத்திற்குள் முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் வழங்குதல், வினாத்தாள் மையங்களில் பாதுகாப்பு வசதி போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செய்முறை தேர்வு மற்றும் பொதுத்தேர்வை எந்தவித குளறுபடியும் இன்றி திட்டமிட்ட நாட்களில் செய்து முடிக்க தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.