`முதல் படம் வெளியாக சில நாட்களே இருந்த நிலையில் இளம் இயக்குநர் மரணம்' -அதிர்ச்சியில் குடும்பம்!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனு ஜேம்ஸ் (31). தொடக்க காலங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது வேல்ட் மலையாளீஸ் கவுன்சில் வழங்கிய சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் மனு ஜேம்ஸ்.

சாபு ஜேம்ஸ் இயக்கத்தில் 2004ல் வெளியான ‘ஐ யாம் க்யூரியஸ்’ சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினி ஃபீல்டுக்கு வந்தார் மனு ஜேம்ஸ். அதன் பின்னர் மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் சினிமாக்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். 31 வயது ஆனா மனு ஜேம்ஸ் இளம் இயக்குநராக உருவெடுத்தார். அவர் தனியாக இயக்கிய முதல் திரைப்படமான ‘நான்சி ராணி’ சினிமாவில் அஹானா கிருஷ்ணா, துருவன், அஜூ வர்க்கீஸ், உள்ளிட்டவர்கள் நடித்தனர். படபிடிப்புகள் நிறைவடைந்து படத்தை வெளியிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

படபிடிப்பு பணியில் மனு ஜேம்ஸ்

விரைவில் திரைப்படத்தைத் திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இருந்தார் மனு ஜேம்ஸ். இன்னும் சில நாட்களில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட இருந்தது. இந்த நிலையில் மனு ஜேம்ஸ் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து எர்ணாகுளம் ராஜகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மனு ஜேம்ஸ் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்கு குருவிலங்காடு சர்ச்சில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மனு ஜேம்ஸ்

குருவிலங்காடு ஜேம்ஸ் ஜோஸ் – சிசிலி ஆகியோரது மகன் மனு ஜேம்ஸ். மின்னா ஜேம்ஸ், பிலிப் ஜேம்ஸ் ஆகியோர் உடன்பிறந்தவர்கள். மனு ஜேம்ஸ்-க்கு நைனா மனு ஜேம்ஸ் என்ற மனைவி உள்ளார். முதல் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் இளம் இயக்குநர் மரணமடைந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் கேரளத் திரையுலகத்தினரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.